செட்டிநாடு மீன் குழம்பு | தேங்காய் சேர்க்காத மீன் குழம்பு

செட்டிநாடு மீன் குழம்பு, இது காரசாரமான, தனித்துவமான சுவையுள்ள மீன் குழம்பு ஆகும். அரைத்துச் சேர்க்கப்படும் மசாலாக் கலவை இந்தக் குழம்புக்குக் கூடுதல் சுவையை அளிக்கிறது.




வீடியோ செய்முறை இங்கே...

தேவையான பொருட்கள்

மீன் - 300 கிராம்
சின்ன வெங்காயம் - 5
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி

அரைக்க

பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
கறிவேப்பிலை - 3 இணுக்கு
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி

தாளிக்க

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை

அரைக்க வேண்டிய பொருட்களை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்தெடுத்துக்கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை உரித்து, நறுக்கிவைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, வெந்தயம், கடுகு சேர்த்துத் தாளிக்கவும். 

கடுகு வெடித்ததும், பெருங்காயம் சேர்த்துத் தாளிக்கவும்.

அத்துடன் நறுக்கிய சின்ன வெங்காயம். பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

அத்துடன், அரைத்த மசாலாக் கலவையைச் சேர்த்து, பச்சை வாசனை போகுமளவுக்கு வதக்கிக் கொள்ளவும்.

அத்துடன், மஞ்சள், வத்தல், மல்லித்தூள்களையும் சேர்த்து வதக்கவும்.

மசாலா வாடை மாறியதும், புளிக்கரைசலைச் சேர்த்து, மூடியிட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

கொதித்துக்கொண்டிருக்கிற குழம்புக் கலவையில், மீன் துண்டுகளைச் சேர்க்கவும். 

மீன் துண்டுகளைச் சேர்த்தபின் பத்து நிமிடங்கள் சிறுதீயில், சிறிதளவு இடைவெளியுடன் மூடிக் கொதிக்கவிடவும்.

மீன் வெந்து எண்ணெய் பிரியவும் குழம்பை இறக்கிப் பரிமாறவும்.

                                                     *********


கருத்துகள்

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!