முட்டை பிரியாணி | குக்கர் பிரியாணி செய்முறை



எளிதாகச் செய்யக்கூடிய முட்டை பிரியாணி செய்முறை. வேகவைத்த முட்டையையும் அரிசி, மசாலாவுடன் கலந்து சமைப்பதால், இந்த பிரியாணியில், முட்டையிலும் மசாலா நன்கு கலந்திருக்கும். மணமான மட்டன் பிரியாணி செய்முறையையும் நம் வலைப்பக்கத்தில் உள்ளது.

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி - 1 1/2 கப்
முட்டை               - 5
வெங்காயம்        - 3
தக்காளி                - 2
பச்சைமிளகாய் - 4
மஞ்சள்தூள்        - 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்  - 1 தேக்கரண்டி
கரம் மசாலா       - 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு,
ஏலம், பிரியாணி இலை- தாளிக்க
புதினா,
கொத்துமல்லி   - கைப்பிடியளவு
எலுமிச்சை - 1
எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

பாஸ்மதி அரிசியைக் கழுவி, அரைமணி நேரம் ஊறவிடவும்.

முட்டையைக் கெட்டியாக வேகவைத்து உரித்துவைக்கவும்.

வெங்காயத்தையும் தக்காளியையும் மெலிதாக நறுக்கவும்.

குக்கர் பாத்திரத்தில் எண்ணெய், & நெய் விட்டு, மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த வெங்காயத்தில், பாதியை எடுத்துத் தனியாக வைக்கவும்.

மீதி வெங்காயத்துடன், பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு வறுக்கவும். தேவையானால், ஐந்தாறு முந்திரிப் பருப்புகளையும் ஒடித்துச் சேர்க்கலாம்.



அத்துடன், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, பாதியளவு மல்லி புதினா இலைகளைச் சேர்த்து வதக்கவும். 

அடுத்து, மசாலாப்பொடி வகைகளையும், தேவையான உப்பையும் சேர்த்து வதக்கி, எண்ணெய் பிரிகிற சமயத்தில், வேகவைத்த முட்டையில், நீளவாக்கில் கத்தியால் கீறி அதையும் மசாலாவுடன் சேர்த்து, உடைந்துவிடாமல் பிரட்டிவிடவும்.

ஊறவைத்த அரிசியையும் வடிகட்டி, மசாலாக் கலவையுடன் சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கவும். 

எடுத்துவைத்த,வறுத்த வெங்காயத்தையும், மீதமுள்ள மல்லி புதினாவையும் 2 1/2 கப் தண்ணீரையும் சேர்த்து, உப்பு, காரம் சரிபார்த்து, அதில் ஒரு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்துவிடவும். 

குக்கரை மூடி, சிறுதீயில் 15 நிமிடங்கள் வைத்து இறக்கவும். விசில் வரவேண்டுமென்று எதிர்பார்க்கவேண்டாம்.

சுவையான, காரசாரமான முட்டை பிரியாணி தயார். வெங்காயம் அல்லது வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடியுடன் பரிமாறவும்.

                                                 *******


கருத்துகள்

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!